சென்னை: உறுப்பினர் உரிமை சீட்டை பெற்றவர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று திமுக அறிவித்துள்ளனர். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: உறுப்பினர் உரிமைச் சீட்டுக்களைத் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் வழங்கிய போது அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் இன்று வரை சம்பந்தப்பட்ட உரிய உறுப்பினரிடம் ஒப்படைக்காமல் இருந்தால், உடனடியாக இந்த அறிக்கை கண்ட ஒருவார காலத்திற்குள் அதனை ஒப்படைக்க வேண்டும்.
அப்படி எவரேனும் உறுப்பினர் உரிமைச் சீட்டுக்களை உரியவரிடம் வழங்கவில்லை என ஆதாரத்தோடு தலைமைக் கழகத்திற்குப் புகார் வருமேயானால், அவர்கள் நடைபெறவிருக்கின்ற திமுக அமைப்புத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாவார்கள் என அறிவிப்பதோடு, அத்தகையோர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.